காந்தியடிகள் எழுதிய முக்கியமான நூல்களில் ஒன்று இந்திய சுயராஜ்ஜியம். விடுதலை பெற்ற இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி அவர் ஆழ்மனத்தில் தீட்டி வைத்த சித்திரத்தின் எழுத்து வடிவமே இந்தப் புத்தகம். முழுக்க முழுக்க கேள்வி பதில் அமைப்பில் எழுதப்பட்ட புத்தகம். அவரே ஒரு கேள்வியை முன்வைத்து, அதற்குரிய பதில்களையெல்லாம் தொகுத்து பதிலாக எழுதிச் செல்கிறார். ஏன் என்கிற கேள்வி இல்லாத கேள்வியே அந்நூலில் இல்லை. சுயாராஜ்ஜியம் ஏன் வேண்டும்? இந்தியா ஏன் அடிமைப்பட்டிருக்கிறது? ஆங்கிலேயர்கள் ஏன் வெளியேறவேண்டும்? ஏன், ஏன் என இப்படி ஏராளமான கேள்விகளை எழுப்பி, ஒவ்வொன்றுக்கும் விரிவான பதிலை எழுதியிருக்கிறார்.