ஏட்டுச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கிய நூல்கள் அனைத்தும் அச்சு வடிவத்துக்கு மாற்றப்பட்ட காலத்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லவேண்டும். அச்சு ஊடகம், அனைத்து வகையான எழுத்துகளையும் அனைவருக்கும் பொதுவாக ஆக்கியது. அச்சுநூல்கள், படிக்கத் தெரிந்த அனைவரையும் தன் வாசகர்களாக உருமாற்றிக்கொண்டன. ஏற்கனவே இலக்கியத்தில் தோய்ந்த வித்துவான்களும் புலவர்களும் ஆசிரியர்களும் ரசனையில் தேர்ந்தவர்களும் புதிதாக உருவான இலக்கிய வாசகர்களுக்கு இலக்கியத்தின் நுட்பத்தையும் அழகையும் வாய்ப்பு கிட்டிய தருணங்களிலெல்லாம் சுட்டிக்காட்டினார்கள். அங்கங்கே இலக்கிய அமைப்புகள் உருவாகி இலக்கிய நயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இலக்கியத்துக்கும் மக்களுக்கும் இடையில் ஒருவித நெருக்கம் உருவாக இத்தகு முயற்சிகள் தூண்டுகோலாக இருந்தன.