இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர்களில் முக்கியமானவர் கல்கி. தம் வாழ்வின் தொடக்க காலத்திலிருந்தே காந்தியக்கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் அவர். கதரணிந்தவர். திருச்செங்கோட்டில் இருந்த இராஜாஜியின் ஆசிரமத்தில் தொண்டாற்றியவர். மதுவிலக்குக் கொள்கையை தமிழகமெங்கும் பரப்பும் நோக்கத்துடன் இராஜாஜி தொடங்கிய விமோசனம் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். திரு.வி.க நடத்தி வந்த .தேசபக்தன் இதழில் சிறிது காலம் பணிபுரிந்தவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு மூன்றுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டவர்.