முதலாம் உலகப் போர் முடிவடைந்ததும் பஞ்சாபிலும் வங்காளத்திலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல புரட்சி இயக்கங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன. ஒருசில இடங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் தாக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். அதனால் புரட்சி இயக்கங்களை ஒடுக்கும் வழிவகைகளை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆங்கில அரசு சிட்னி ரெளலட் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அவர்களுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் புதியதொரு சட்டத்தை 1919ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்தது. புரட்சி இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று கருதும் எவரையும் அரசு எவ்விதமான வழக்கு விசாரணையுமின்றி கைது செய்து இரண்டாண்டுகள் வரைக்கும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் வழிவகுத்தது.