முப்பத்தொன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு லக்னோவில் 26.12.1916 முதல் 30.12.1916 வரை அம்பிகா சரண் மஜும்தார் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட காந்தியடிகள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் அயல்நாட்டுக்குத் தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பாக, அதுவரை அரசாங்கம் பின்பற்றி வந்த நடைமுறையை எதிர்த்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அந்தத் திட்டத்தின் கீழ் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் மரபை உடனடியாக அரசு கைவிடவேண்டும் என்றும் குரல் கொடுத்தார். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு பார்வையாளர்களிடமிருந்து மகத்தான ஆதரவும் கிடைத்தது.