சமீப காலத்தில் சிறுகதைகளை எழுதி
வருபவர்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதிவரும் முக்கியமான படைப்பாளி சாம்ராஜ்.
இதற்கு முன்பு தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வந்த அனுபவத்தில் அவருக்கு மிக இயல்பாகவே
படைப்புமொழி கைகூடி வந்திருக்கிறது. ஒரு படைப்பில் எந்த அம்சம் முன்வைக்கப்பட வேண்டும்,
எந்த அம்சத்தை மறைக்கவேண்டும், எது இலைமறை காயென இருக்கவேண்டும் என்னும் தெளிவையும்
அவர் அடைந்திருக்கிறார். பத்து சிறுகதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கும் அவருடைய முதல்
தொகுதி அவருடைய வரவை அழுத்தமாகப் பதிவு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.