கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி, தனித்தன்மையுடைய சிறுகதைகளை அளித்து, தமிழ்ச்சூழலின் கவனம் பெற்ற இளைய சிறுகதையாளர்கள் என ஒரு பத்து பேரையாவது உடனடியாகச் சொல்லிவிடமுடியும். செந்தில் ஜெகன்னாதன், சுஷில்குமார், மயிலன்.ஜி.சின்னப்பன், ரா.செந்தில்குமார், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், ஐ.கிருத்திகா, கமலதேவி, வைரவன், லோகேஷ் ரகுராமன், அமுதா ஆர்த்தி, பொன்.விமலா என நீளும் அந்தப் பட்டியலில் புதிய இளைய எழுத்தாளராக அஜிதன் தன் முதல் சிறுகதைத்தொகுதி வழியாக இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே மைத்ரி, அல்கிஸா ஆகிய இரு சிறிய நாவல்கள் வழியாக அவர் ஈட்டிவைத்திருக்கும் இடத்தை, மருபூமி என்னும் புதிய சிறுகதைத்தொகுதி உறுதி செய்திருக்கிறது.