1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார். அவர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருந்தார். பகலில் கல்லூரி, இரவில் பணி என்பது அவர் வழி. என் தமிழிலக்கிய நாட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருடைய ஆங்கில இலக்கிய நாட்டம் எனக்கும் பிடித்திருந்தது. நான் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அவர் தனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருநாள் சோமர்செட்மாம் எழுதிய ‘நிலவும் ஆறு நாணயங்களும்’ என்கிற நாவலை எடுத்துவந்து, ‘ரொம்ப முக்கியமான நாவல். படிச்சிப் பாருங்க’ என்றார். ’பால் காகின்னு ஒரு முக்கியமான ஓவியர் பாரீஸ்ல இருந்தார். வான்காவுடைய நண்பர். அவருடைய வாழ்க்கையை அடிப்படையா வச்சி இத எழுதியிருக்கார்’ என்று கூடுதல் தகவலையும்
அளித்தார். வான்காவின் சுயசரிதையான ‘வாழும் விருப்பம்’ புத்தகத்தை அப்போதுதான் படித்து முடித்திருந்தேன். அதனால் நசீர் கொடுத்த கூடுதல் குறிப்பு, அப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. விட்டுவிட்டு, ஒரு வார காலத்தில் அதைப் படித்து முடித்தேன். தரகனாகவும் ஓவியனாகவும் வாழ்கிற ஒரு மனிதன், ஒரு கட்டத்தில் ஓவியனாகமட்டுமே வாழ்வது என்று குடும்பத்தைத் துறந்து வெளியேறி அடையும் வெற்றிகளையும் தோல்விகளையும் அவமானங்களையும் சிரமங்களையும் தொகுத்து முன்வைத்திருந்த அந்தப் படைப்பு என்னை மிகவும் கலங்கவைத்துவிட்டது. கலையைப் பின்தொடர்ந்து செல்லும் கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கலான வாழ்வா என்று நினைத்து நிலைகுலைந்திருந்தேன். நசீருடன் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ‘உலகம் முழுக்க கலையை வாழவைக்க, கலைஞர்கள் இப்படி வாழ்ந்து வதைபட்டிருக்கிறார்கள்’ என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி சொன்னார் அவர். மேலும், ‘நம் பாரதியார், புதுமைப்பித்தன்னு எழுத்துக்கலைஞர்கள் சந்தித்த வாழ்க்கை நெருக்கடிகள்போல, நெருக்கடிக்கு ஆளான ஓவியக் கலைஞர்கள் உலகம் முழுதும் இருக்கிறார்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.