இந்திய வரலாற்றில் ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டத்தை இருபெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். காந்தியடிகளின் வருகைக்கு முற்பட்ட காலம் என்பது ஒரு பகுதி. அவர் வருகைக்குப் பிறகான காலம் என்பது அடுத்த பகுதி. காந்தியடிகளே சுதந்திரப்போராட்டத்துக்கு ஒரு வடிவத்தையும் நோக்கத்தையும் வழிமுறையையும் வகுத்தவர். சத்தியாகிரகமும் அகிம்சையும் அவருடைய வழிமுறையாக இருந்தன. அப்போராட்டம் எங்கும் வெறுப்பை விதைக்கவில்லை. மாறாக தன் உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்வைப்பதாக இருந்தன. போராட்டத்தின் வழியில் அவர் வன்முறையை முற்றிலும் விலக்கிவைத்தார்.