13.04.1919 அன்று ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காரணமின்றி சுட்டுவீழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்னும் ஆங்கில அதிகாரி தண்டிக்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை எழுப்பியது. ஆனால் பெயரளவில் மட்டும் கண்துடைப்பாக ஒரு விசாரணையை நிகழ்த்திய அரசு 1920இல் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் டயரை விடுவித்துவிட்டது. இதையொட்டி 1920இல் செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாடு அந்த விடுதலையை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தது. தொடர்ந்து நாடு சுயராஜ்ஜியம் அடைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் இத்தகு குற்றங்கள் மீண்டும் நிகழாதவகையில் தடுக்கமுடியும் என்றும் நாட்டின் கெளரவத்தை நிலைநாட்டமுடியும் என்றும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் காந்தியடிகள்.