ஸ்டேஷனுக்குள் வண்டி நுழைந்தது. வேகம் குறையத் தொடங்கிய போதே சுகன்யாவைக் கண்டுபிடிக்கத் தயாரானேன். எதிர்பார்ப்பும் பயமும் கலந்த பரவசநிலை. திடுமென இதயத்துடிப்பு அதிகமானது.
இக்கின்பாதம்ஸ் கடை பார்வைக்கு முழுசாய்த் தெரிந்தது. ஒரு பக்கம் புத்தகத் தொங்கல். மறுபுறம் பழக்குலைகள். நடுவில் குளிர்பானங்களின் வரிசை. அதன் அருகில் இருந்த கல்பெஞ்சில்தான் சுகன்யாகவை வந்து காத்திருக்கச் சொல்லி எழுதியிருந்தேன். கிழிசல் அணிந்த இரண்டு சிறுவர்கள் காகிதத் தம்ளர்களைச் சேகரித்து எண்ணிக்கொண்டிருந்த காட்சிதான் அங்கே தெரிந்தது. சுகன்யா இல்லை. ஏமாற்றம் நெஞ்சை அடைத்தது. மூளையில் ஒரு நரம்பு துடித்து அடங்கியது. சட்டென எடை பார்க்கும் மிஷின் முன் நின்றிருந்த ஓர் உருவம் பார்வையில் விழுந்தது. துரதிருஷ்டவசமாய்ப் பின்பக்கம்தான் தெரிந்தது. அந்த வெளிர் நிறப்புடைவை அவளுடையதுதான்.