‘‘நெல்லித்தோப்பு கவுண்டர் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். போய்ப் பாருடா’’ என்றார் அப்பா. வெயிலில் ரொம்ப தூரம் நடந்து வந்திருந்தார் அவர். கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தார். நாலைந்து இடங்களில் எனக்காகவே அலைந்தலைந்து வேலை பார்த்துத் தருவதும் அதை நான் இரண்டு மூன்று வாரங்களிலேயே தொலைத்துவிட்டு நிற்பதுமாக மாறிமாறி நடந்து கொண்டிருந்த காலம் அது. என்னைப் பார்த்த பார்வையில் ஒருவித விரோதம். எரிச்சல். நான் பதில் சொல்ல கொஞ்ச நேரம் தாமதித்து விட்டேன். ‘‘துப்பு கெட்ட நாயே. இதான் கடைசி தரம். இனிமே சத்தியமா ஒனக்காக எவன்கிட்டயும் போய் பல்லிளிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன். நீ உருப்பட்டாலும் சரி. எங்கனா உண்டச்சோறு வாங்கித் துன்னாலும் சரி. இதோட கை கழுவிட்டேன். ஒங்கிட்ட மாரடிக்க என்னால ஆவாது’’ என்று கத்தினார்.