இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் உடல்நலம் குன்றி 01.08.1920 அன்று மறைந்தார். 12.08.1920 அன்று சென்னைக்கு வந்திருந்த காந்தியடிகள் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையில் திலகருக்கு அஞ்சலி செலுத்தி தன் உரையைத் தொடங்கினார். திலகரின் அர்ப்பணிப்புணர்வையும் தியாகத்தையும் பெரிதும் பாராட்டிப் பேசினார் காந்தியடிகள். திலகர் மூட்டிவிட்டுச் சென்ற சுதந்திரக்கனல் நாடெங்கும் பரவி வெற்றி கிட்டும் வகையில் இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் விரிவாக முன்வைத்தார்.