புறநகரில் ஒரு வீடு கட்டிக் குடியேறுகிறது ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு வைத்தியர். அக்குடியிருப்பில் அவருக்கு முன்னால் வீடு கட்டிக்கொண்டு குடிபோனவர்கள் பலர். அவரைத் தொடர்ந்து வீடு கட்டிக்கொண்டு குடிவந்தவர்களும் உண்டு. இரவு பகல் வித்தியாசமின்றி அடிக்கடி வீடுகளுக்குள் நுழைந்துவிடும் பாம்புகளைக் கண்டு எல்லோருமே அஞ்சுகிறார்கள். பாம்புச் செய்தி பரவத் தொடங்கியதுமே வைத்தியர் எங்கிருந்தோ சிறியாநங்கைச் செடிகளைக் கொண்டுவந்து வீட்டைச் சுற்றி சீரான இடைவெளிகளில் நட்டு வளர்க்கத் தொடங்குகிறார். ஆழமாக வேர் பிடித்துவிட்ட செடிகள் தழைத்து வளர்ந்து நிற்கின்றன. காற்றில் பரவியிருக்கும் அச்செடிகளின் மணம் பாம்புகளை நெருங்கவிடாமல் தடுத்துவிடுகின்றது. பாம்புத்தொல்லையால் மற்ற குடும்பங்கள் தவித்துத் தடுமாறும் போது, வைத்தியரின் குடும்பம் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றது.