கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் புகுமுக வகுப்புத் தேர்வை எழுதிய மாணவரொருவர் முடிவுக்காகக் காத்திருந்தார். அந்த வட்டாரத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்ற முதல் மாணவர் அவர். அவருடைய அம்மா, அப்பா, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அவருடைய தேர்வு முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்த மாணவர் மட்டும் தன் முடிவைப்பற்றிய பதற்றமோ, கவலையோ இல்லாமல், தொடர்ச்சியாகக் கிடைத்த விடுப்பை மனத்துக்குப் பிடித்த விதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தகமே உலகமென வாசிப்பின்பத்தில் மூழ்கியிருந்தார்.