எண்பதுகளின் நடுப்பகுதியில் இரண்டாண்டு காலம் கர்நாடகத்தில் ஷிமோகா என்னும் நகரில் வேலை செய்துவந்தேன். எங்கள் கோட்ட அலுவலகம் ஹூப்ளியில் இருந்தது. அந்த நகரங்களில் தினமும் நாடகங்கள் மட்டுமே நிகழ்த்தப்படும் அரங்குகள் இருந்தன. இரவு ஏழு மணிக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு முடிந்துவிடும். உள்ளூர் குழுக்களும் வெளியூர் குழுக்களும் மாறிமாறி நாடகங்களை அரங்கேற்றும். கர்நாடகம் முழுதும் ஆண்டுதோறும் வலம்வரும் நீநாசம் குழுவின் நாடகங்களுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும். ஒருமுறை தார்வாட் நகரில் நான் ஹயவதனன் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். அந்த நாடகத்தை எழுதியவர் கிரீஷ் கார்னாட்.