ஏழாம் எண் பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் அது நடந்தது. ஏற்கனவே நின்றிருந்த பேருந்து கடக்கும்வரை காத்திருக்கும் பொறுமையற்ற ஆட்டோ ஒன்று பக்கவாட்டில் என் பக்கமாக வேகமாக சட்டென இறங்கி சிறிது தொலைவு ஓடி மீண்டும் தார்ச்சாலையில் வளைந்த நிலையில் ஏறிப் பறந்தது. ஆட்டோவுக்குள் யாரோ இளைஞனொருவன் கைநிறைய புகைப்படங்களைப் புரட்டியபடி இருந்ததை மட்டுமே நான் ஒரே ஒரு கணம் பார்த்தேன். ஆனால் முகமோ, அணிந்திருந்த ஆடைவிவரமோ எதுவுமே என் மனத்தில் பதியவில்லை. ஆட்டோவின் எதிர்பாராத நடத்தையால் என் மனம் அச்சத்தில் ஒடுங்கியது. மறுகணம் அதன் குலுக்கலால் அந்த இளைஞனின் பிடியிலிருந்து நழுவிய ஒரு புகைப்படம் காற்றில் அலைந்துஅலைந்து அடுத்த கணத்தில் என் மார்பில் வந்து படிந்தது.