சங்கப்பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி பேசாதவர்களோ, பெருமைப்படாதவர்களோ தமிழ்ச்சூழலில் இல்லை. அந்த அளவுக்கு அவற்றின் அறிமுகம் வேரூன்றியிருக்கிறது. அவை கருத்தாழம் கொண்டவை. காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. அப்பாடல்களில் அமைந்திருக்கும் நயங்களை எளிய வாசிப்புப்பழக்கம் கொண்டவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேடைகளில் அவை மீண்டும் மீண்டும் முழங்கப்பட்டுள்ளன. பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்ககாலத்தில் தாவரங்கள், சங்ககாலத்தில் விலங்குகள், சங்ககாலத்தில் போர்கள் என ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை சங்ககாலத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழில் யாரும் ஒரு நாவலை எழுத முயற்சி செய்ததில்லை. ஜெயமோகன் எழுதிய கொற்றவை நாவல் சங்ககாலத்துக்கும் முந்தைய பண்பாட்டுக்கூறுகளை பல கோணங்களில் தொகுத்தளிக்கும் முயற்சியை முன்னெடுத்த முக்கியமான படைப்பு. இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குரூர் என்னும் மலையாள நாவலாசிரியர் சங்ககாலத்தைக் களமாகக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். அது
கேரளச்சூழலில்
உடனடியாக பரவலான கவனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த நாவல் மலையாளத்திலிருந்து
தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர் கே.வி.ஜெயஸ்ரீ. நாவலின் பெயர் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’