செய்வதற்கு எந்த வேலையும் இல்லாதபோது நானும் சீனி என்கிற சீனிவாசனும் பொதுவாக சினிமாவுக்குப் போவதுதான் வழக்கம். டிக்கட் வாங்க பணம் இல்லாத சமயங்களில் மட்டும் எங்கள் ஊர் நாற்சந்தியில் சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். அதுவும் அலுத்துவிட்டால் வெற்றிலைத்தோட்டம் வழியாகச் சென்று ஐயனார் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஒற்றையடிப்பாதையில் சிறிது தூரம் நடந்து பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் அரசமரத்தடிக்குப் போய் உட்கார்ந்துவிடுவோம். கைப்பேசியில் பாட்டு ஒலிக்க, அந்த இசையின் தாலாட்டில் லயித்தபடி மல்லாந்து படுத்து வளைந்துவளைந்து போகும் மரக்கிளைகளின் பின்னலையும் வெண்ணீல வானத்தையும் கொசுக்கடியைச் சகித்துக்கொண்டு பார்த்திருப்போம்.