பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்கி ரயில் பாதை வரைக்கும் நீண்டிருக்கும் பஞ்சாயத்து போர்டு தெரு முடிவடையும் இடத்தில் இடதுபுறமாகப் பிரியும் பாதை பெருமாள் கோவில் வரை செல்லும். உயர்ந்தோங்கிய அதன் மதிலுக்கும் ரயில் பாதைக்கும் இடைப்பட்ட நிழல் சூழ்ந்த பகுதி விளையாடுவதற்குப் பொருத்தமான இடம். ஆனால் அங்கே காலை, பகல், மாலை எல்லா நேரங்களிலும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அங்கே எங்களைப்போன்ற சிறுவர்கள் வேடிக்கை பார்க்கலாமே தவிர விளையாடமுடியாது.