ஒரு கன்னட நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது. ஓர் ஊரில் ஒரு செல்வந்தரின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனுக்கு மருத்துவம் பார்க்காத வைத்தியரே அந்த ஊரிலும் அக்கம்பக்கத்து ஊர்களிலும் இல்லை. அந்த அளவுக்கு எல்லோரும் வந்து அந்தச் சிறுவனுக்கு வைத்தியம் பார்த்துவிட்டார்கள். எந்த மருந்தும் அவனைக் குணப்படுத்தவில்லை. சிறுவனின் ஆரோக்கியமும் நாளுக்குநாள் குன்றியபடியே இருந்தது. அதை நினைத்து செல்வந்தர் மிகவும் மனம் வருந்தினார். ஏதாவது தெய்வக்குற்றமாக இருக்கக்கூடும் என்று யாரோ ஒரு சொந்தக்காரர் சொன்னதை முக்கியமானதாக எடுத்துக்கொண்டு, ஊரூராகச் சென்று எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்து மனமுருக வேண்டிக்கொண்டார். அந்தப் பிரார்த்தனைகளும் பலனளிக்கவில்லை.