மகாகவி பர்த்ருஹரியின்
சுபாஷிதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதிநூல். மதுமிதா இந்த நீதிநூலை
சமஸ்கிருதத்திலிருந்து நேரிடையாகவே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
சுபாஷிதத்தில் நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்னும் மூன்று
பெரும்பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பத்து உட்பிரிவுகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு
உட்பிரிவிலும் பத்துப் பாடல்கள். ஒவ்வொரு சதகத்திலும் நூறு பாடல்கள் என்கிற
கணக்கின்படி சுபாஷிதத்தில் முன்னூறு பாடல்கள் உள்ளன. படித்து முடிப்பதற்கான
பாடல்கள் அல்ல இவை. நினைக்கும்போதெல்லாம் எடுத்து மீண்டும்மீண்டும்
படித்துப்படித்து அசைபோடத்தக்க பாடல்கள். திருக்குறளைப் படிப்பதுபோல
எங்கிருந்துவேண்டுமானாலும் தொடங்கி நாலைந்து பகுதிகளைமட்டும் படித்துவிட்டு
மூடிவைத்துவிடலாம். அந்த வாசிப்பில் மனத்தைத் தொடும் வரிகள்வழியாக ஒட்டியும்
வெட்டியும் விரிவடையும் எண்ணங்களின் தொகுப்பே அவை வழங்கும் அனுபவம். அந்த அனுபவம்
ஒரு புதையல். சில சமயங்களில் நேரிடையாகவே கண்களில் தென்படும். சில சமயங்களில்
ஒவ்வொன்றையும் விலக்கிவிலக்கி நடையாய் நடந்தபிறகுதான் கண்டடையமுடியும். சுபாஷிதம்
வாசிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு புதையலைக் கண்டெடுக்கலாம்.