ஜெயமோகன் எழுதிய அமுதம் என்ற சிறுகதையை கடந்த ஆண்டில் படித்தேன். தமிழ்ச்சிறுகதைகளில் அக்கதைக்கு சிறப்பானதொரு இடமுண்டு. ஒரு மலையோரக் கிராமம். பால்மணத்தையே அறியாது அது வறுமையில் மூழ்கியிருக்கிறது. அங்கிருக்கும் அனைத்துப் பசுக்களும் மடி வற்றியவை. ஒருநாள் அக்கிராமத்துக்கு காட்டிலிருந்து ஒரு பசு வந்து சேர்கிறது. அது வழங்கும் பாலால் கிராமத்துக் குழந்தைகள் ஊட்டமடைகிறார்கள். பெண்களும் பெரியவர்களும் ஊட்டமடைகிறார்கள். பெண்களின் கண்களில் நிறைவும் நம்பிக்கையும் பரவுகின்றன. அந்தப் பசுவின் பாலால் அவர்களுடைய ஆற்றலும் பெருகுகிறது. ஆண்களின் ஆற்றலைவிட பெண்களின் ஆற்றல் மேலோங்கிச் செழிக்கிறது.