1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளியானது. சிறுகதையே என் வெளிப்பாட்டுக்கான வடிவம் என்பதைக் கண்டுணர்ந்த பிறகு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதினேன். ஒருபோதும் பிரசுர சாத்தியத்தைப்பற்றிய யோசனையே எனக்குள் எழுந்ததில்லை. அப்போதெல்லாம் கதையின் முதல் வடிவத்தை வேகமாக ஒரு நோட்டில் எழுதிவிடுவேன். தொடங்கிய வேகத்தில் சீராக எழுதிச்சென்று ஒரே அமர்வில் முடிப்பதுதான் என் பழக்கம். அடுத்தடுத்து வரும் நாட்களில் அந்தப் பிரதியை மீண்டும் மீண்டும் படித்து தேவையான திருத்தங்களைச் செய்வேன். அதற்குப் பிறகே அந்தச் சிறுகதையை வெள்ளைத்தாட்களில் திருத்தமான கையெழுத்தில் படியெடுப்பேன்.