ஒரு வீட்டில் ஜன்னல் கதவுக்கு மறுபுறத்தில், கம்பிகளுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணில் கூடு கட்டியிருக்கிறது. அதற்குள் அணில் குஞ்சுகள் கீச்சுகீச்சென சத்தம் போடுகின்றன. வீட்டில் இருப்பவர்கள் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறக்க முயற்சி செய்யும்போதெல்லாம் திறக்கவேண்டாம் என எச்சரிக்கைக்குரல் கொடுத்துத் தடுக்கிறார் வீட்டுத்தலைவி. அதே வீட்டின் தோட்டத்தில் நிறைய மரங்கள் உள்ளன. அவ்வப்போது பச்சைக்கிளிகள் அந்த மரங்களில் அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. இளைப்பாறும் பச்சைக்கிளிகளுக்காக பார்வை படும் இடத்தில் கிண்ணத்தில் தண்ணீரும் தட்டில் அரிசியும் வைத்திருக்கிறார் அவர். அந்த வீட்டு வாசலில் ஒரு பெரிய மாமரமும் இருக்கிறது. ஒரு வண்டியில் ஏற்றும் அளவுக்கு அந்த மரத்தில் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. பறிக்கும் பழங்களை அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறார் அவர். பறிக்காத பழங்களை அந்த ஊர்க் குரங்குகள் கூட்டமாக வந்து தினந்தினமும் கும்மாளம் போட்டுத் தின்றுவிட்டுச் செல்கின்றன. இன்று, அந்த அணில்கூடு அப்படியே இருக்கிறது. அந்தக் கிளிகளும் தினமும் வந்து இளைப்பாறிவிட்டுச் செல்கின்றன. குரங்குகளும் வந்து பழம் தின்றுவிட்டுச் செல்கின்றன. ஆனால் அந்த வீட்டுத்தலைவிதான் இல்லை. அவர் புற்றுநோய்க்கு இரையாகி மறைந்துவிட்டார். அவர் பெயர் சித்ரா.