ஹம்பி எக்ஸ்பிரஸில் பிரயாணம் செய்த போது சந்தித்த நபரின் முகம் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர்தான் எனக்கு இக்கதையைச் சொன்னார். சுவாரஸ்யமாகவும், தெளிவான குரலிலும் அக்கதையை விவரித்தார் அவர். சதாகாலமும் என்னை அரிக்கும் குழப்பம் எதுவும் அவரிடம் இல்லை. மரங்களைப் பற்றித்தான் அவருக்கு எத்தனை ஞானம் எத்தனை அனுபவம். எத்தனை வருஷங்கள் பாடுபட்டுச் சேகரித்த அனுபவமோ, அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முத்துக்குச் சமம். அவர் சொன்ன கதையின் பிரமிப்பு என்னைவிட்டுச் சற்றும் அகலவில்லை. முதன்முதலில் அந்தக் கதையை என் மனைவியிடம்தான் பிரஸ்தாபித்தேன். அவளோ சிரித்துவிட்டாள். நம்பிக்கையற்ற அவள் பார்வை என்னை நிலைகுலைய வைத்தது. அன்றைய தேதியில் நான் எங்கும் பிராயணமே செய்யவில்லை என்றும் யாரையும் சந்திக்கவே இல்லை என்றும் ஆணித்தரமாய்ச் சொன்னாள். அவள் சொன்ன பிறகு நம்பத்தான் வேண்டியிருந்தது. நீங்கள் வேண்டுமானால் சந்தேகிக்க இடமுண்டு என்ற வகையில் இதை எடுத்துக் கொள்ளலாம்.