கால்நடை மருத்துவராகப் பணிபுரியும் நடேசன் தன் மருத்துவமனை அனுபவங்களை இருபது கட்டுரைகளாக இத்தொகுதியில் பதிவு செய்துள்ளார். துறைசார்ந்த ஈடுபாடும் பற்றும் மிகுதியாகும்போது, ஒருவருடைய கண்ணோட்டம் தானாகவே விரிவடைகிறது. சம்பளத்துக்காக ஒரு துறையில் வேலை செய்வது என்து ஒருவிதம். ஏன், எப்படி, எதனால் என்பவைபோன்ற கேள்விகளால் மனத்தை நிரப்பிக்கொண்டு ஒரு துறையில் வேலை செய்வது என்பது இன்னொரு விதம். இப்படிப்பட்டவர்களே அறிவியலாளர்களைப்போல ஆய்வுமனப்பான்மையோடு தனது துறையில் ஈடுபடுகிறார்கள். தொழிலிடங்களில் தமக்கு நேரும் அனுபவங்களை முன்வைத்து தம் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி அறிகிறார்கள். இவர்களுடைய அணுகுமுறை, இவர்களைத் திறமைசாலிகளாக உருமாற்றுகிறது. புதுப்புது அனுபவங்களின் வாசல்கள் அவர்களுக்காக திறந்து வழிவிடுகின்றன.