ஜூலை மாத ‘உயிர்எழுத்து’ இதழில் வண்ணதாசன் எழுதிய ‘நாபிக்கமலம்’ சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. நாபிக்கமலம் நாபிக்கமலம் என்று ஆழ்மனத்தில் அசைபோட்டபடி இருந்தபோதே, இதயக்கமலம் என்றொரு சொல் எங்கிருந்தோ பிறந்துவந்து இணைந்து கொண்டது. பிறகு இதயக்கமலம், நாபிக்கமலம் ஆகிய இரு இணைசொற்களையும் நாலைந்து முறை இணைத்து இணைத்து சொல்லிப் பார்த்தேன். சட்டெனெ என் அகத்தில் ஒரு சுடர் மின்னி மறைந்ததை உணரமுடிந்தது. கதையின் மையம் அதைத்தான் காட்சிப்படுத்துகிறது. நாபிக்கமலத்தில் ஒருத்தியும் இதயக்கமலத்தில் இன்னொருத்தியும் இருக்க, ஓர் ஆண் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. பெண்நட்பு என்பதை ஏற்றுக் கொள்வதில் பெண்துணைக்கு உருவாகும் தயக்கம் கொஞ்சநஞ்சமல்ல.