சென்ற நூற்றாண்டில் தமிழ்க்கவிதைகளுக்கான
இடத்தை மிக உயரத்துக்குக் கொண்டுசென்று நிலைநிறுத்தியவர் பாரதியார். இனிமையும் எளிமையும் வீரமும் வேகமும் பொருந்திய சொற்களால் அவர் புனைந்த கவிதைகள் அவருக்கு பெயரையும் புகழையும் தேடித் தந்தன. அவர்
மறைந்து தொண்ணூற்றியெட்டு ஆண்டுகள் கடந்த பிறகும்கூட அவர் படைப்புகள் இன்றளவும் புதிய இளம்வாசகர்களை ஈர்க்கும் ஆற்றலுடன் உள்ளன. ’மந்திரம்போல சொல்லின்பம் வேண்டும்’ என்று எழுதிய பாரதியாரின் பாடல்கள் கண்ணால் படிப்பவரின் மனத்தையும் காதால்
கேட்பவரின் மனத்தையும்
காந்தம்போல இழுக்கும் மந்திரசக்தி பொருந்தியவை. அவருடைய ஒவ்வொரு பாடலும் அவரை நினைக்கவைக்கும் அடையாளச்சின்னம். அவருடைய காலத்திலேயே அவர் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தன. பல பாடல்கள் தொடர்ச்சியாக மேடைகளில் பாடப்பட்டன. சத்தியமூர்த்தி, கோதைநாயகி, ஜீவா, ஜெயகாந்தன் போன்றோர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சிமயமான குரலில் பாடி மக்களிடையே எழுச்சியூட்டினார்கள் என்பது வரலாறு.