கன்னடத்தின் சிறந்த நவீன சிறுகதையாசிரியர்களுள் ஒருவர் லங்கேஷ். உளவியலின் துணையோடு லங்கேஷ் தன் சிறுகதைகளில் நவீனத்தன்மையைப் புகுத்தினார். எண்ணற்ற புறஉலக நடவடிக்கைகளுக்கும் ஆழ்மனம் மட்டுமே அறியவல்ல அகஎழுச்சிகளுக்கும் இடையிலான இணைப்பு என்பது ஒரு கால்வாய்ப்பாலம்போல வெளிப்படையானதல்ல, ஒற்றைத்தன்மை உடையதுமல்ல. பலநூறு புள்ளிகளிலிருந்து கிளம்பி ஒரு புள்ளியைநோக்கி நீளும் பலநூறு கோடுகள்போல ஏராளமான இணைப்புகளைக் கொண்டதாகும். ஒரே சமயத்தில் வரையறை செய்யமுடிகிற ஒன்றாகவும் துல்லியமான வரையறையை வழங்க இயலாமல் பல்வேறு சாத்தியப்பாடுகளைநோக்கித் தாவித்தாவிச் செல்கிற ஒன்றாகவும் அந்த இணைப்பு விசித்திரத் தன்மையோடு இருக்கிறது. இந்த விசித்திரத்தன்மை நவீன சிறுகதைகளுக்கு வழங்கக்கூடிய பார்வையை முழுஅளவில் பயன்படுத்திக் கொண்டவர் என்று லங்கேஷைச் சுட்டிக்காட்டமுடியும்.