கல்கத்தாவில் 04.09.1920 அன்று நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்துக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார். அந்த உரையில், ஜாலியன்வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலைக்கு எல்லா வகையிலும் மூல காரணமாக இருந்த ஜெனரல் டயர் மீது பெயருக்கு ஒரு விசாரணை நடைபெற்ற போதும் அவருக்கு எவ்விதமான தண்டனையும் பிரிட்டன் அரசு வழங்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். இப்போக்கு பிரிட்டன் அரசுக்கும் இந்திய வைசிராய்க்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என எடுத்துரைத்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனியொரு முறை நிகழாமல் இந்திய மக்களைப் பாதுகாப்பதற்கு சுயராஜ்ஜியமே சிறந்த தீர்வென்றும் அறவழியிலான ஒத்துழையாமை இயக்கத்தின் வழியாக சுயராஜ்ஜியத்தை அடைய இந்திய மக்கள் அனைவரும் இணைந்து போரிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.