இலக்கியத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் பங்களிப்புக்கு முக்கியமானதொரு பங்கு உண்டு. பிறமொழிச் செல்வங்களைத் தேடித்தேடி எடுத்து மொழிபெயர்த்து தம் தாய்மொழி வாசகர்களுக்கு தொடர்ச்சியாக அவர்களே வழங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒரு படைப்பாளியாக ஓர் எழுத்தாளருக்கு எந்த அளவுக்கு முதன்மையிடம் உள்ளதோ, அதே அளவிலான முதலிடத்துக்கு மொழிபெயர்ப்பாளர்களும் தகுதியுள்ளவர்கள். ஒரு சூழலில் வாழ்கிறவர்களுக்கு, பிறமொழி இலக்கியங்கள் அந்தந்த மொழிகளுக்குரியவர்களுடைய வாழ்க்கைப்போக்குகளையும் எண்ணப்போக்குகளையும் உணர்வதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளன. தமிழகச்சூழலில், பாரதியார் தொடங்கி ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருசில மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகி மற்ற மொழிகளின் இலக்கியவளத்தை தமிழ்வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாசகர்களாக நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.