Home

Showing posts with label வற்றாத நினைவுகள். Show all posts
Showing posts with label வற்றாத நினைவுகள். Show all posts

Sunday, 14 March 2021

வற்றாத நினைவுகள் - புதிய கட்டுரைத் தொகுதிக்கான முன்னுரை

 

புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையில் அமைந்த எங்கள் சிற்றூரில் பேருந்துகள் நிற்குமிடத்தின் பெயர் சத்திரம். இந்த இடத்துக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது என்று புதிதாகப் பார்ப்பவர்கள் குழப்பமடையக்கூடும். அந்த அளவுக்கு கட்டடங்களாலும் கடைகளாலும் சூழப்பட்ட இடமாக இப்போது காட்சியளிக்கிறது அந்த இடம். உண்மையிலேயே அங்கே ஒரு சத்திரம் இயங்கிவந்தது. பருமனான தூண்கள். இருபது பேர் படுத்துத் தூங்கும் அளவுக்கு பெரிய பெரிய கல்திண்ணைகள். ஓடு வேயப்பட்ட கூரை. பின்கட்டையும் முன்கட்டையும் இணைக்கும் வகையிலும் வெளிச்சமும் காற்றும் தாராளமாக வந்துபோகும் வகையிலும் அமைந்த இடைநாழி. இதுதான் சத்திரத்தின் எளிய சித்திரம். முன்னால் வட்டமாக ஒரு பெரிய கிணறு இருக்கும். கிணற்றையொட்டி ஒரு பெரிய மகிழமரமும் ஒரு நாவல்மரமும் இருக்கும். என் சிறுவயது நாட்களில் அதிகாலையில் நடமாட்டம் தொடங்குவதற்கு முன்னாலேயே சென்று காற்றில் உதிர்ந்துகிடக்கும் நாவற்பழங்களையும் மகிழம்பூக்களையும் சேகரித்துக்கொண்டு வீடு திரும்பிய காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது.