கருத்துலக சுதந்திரத்தைத்
தேடிச் செல்லும் கலைஞனான ஜே.ஜே.யின் பயணத்தையும் அவன் எதிர்கொள்ளும் மோதல்களையும்
தொகுத்து ஒரு வாழ்க்கைவரலாற்றின் தோற்றத்தோடு முன்வைத்திருக்கும் நாவாலன
"ஜே.ஜே. சில குறிப்புகள்" தமிழில் எழுதப்பட்ட முக்கியப்படைப்புகளில்
ஒன்று. தனிமனிதப் பிரக்ஞைக்கும் சுதந்திரச் சிந்தனைக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக
நம்புகிற ஒரு கலைஞனாக ஜே.ஜே.யைச் சித்திரக்கிறார் சுந்தர ராமசாமி. கலைகளும் இலக்கியங்களும்
இத்தகு சுதந்திர சிந்தனைகள்வழியாகவே உருப்பெறுகின்றன. ஏற்கனவே நிறுவனமயமாக்கப்பட்ட
கருத்துகளை மோதி எதிர்கொள்வதைத் தவிர இந்த சுதந்திர சிந்தனைக்கு வேறு வழியில்லை.
தன்னோடு இருப்புக்காகமட்டுமல்ல, தொடர்ந்த நகர்வுக்காகவும்
இந்த மோதலை நிகழ்த்தவேண்டியிருக்கிறது.