என் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும்.
ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார்.
ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான
புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஏதேதோ
காரணங்களை அடுக்கி விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பத்தை அவருக்காக எழுதிக் கொடுக்கும்
வேலையை என்னிடம் ஒப்படைத்துவிடுவார். என் முணுமுணுப்புகளை அவர் ஒருபோதும்
பொருட்படுத்துவதில்லை. அந்தப் பத்து நாட்களில் ஊர் சுற்றிய அனுபவத்தை அவர்
விவரித்துச் சொல்வதைக் கேட்டு மனம் மயங்கி அவருக்காக அந்த வேலையைச்
செய்துகொடுப்பேன். ஊர்சுற்றுவதும் திரிந்தலைந்த சங்கதிகளை விவரிப்பதும் அவரைப்
பொறுத்த அளவில் மகத்தான அனுபவங்கள். பொருள்செலவு, சம்பள இழப்பு, மற்றவர்கள்
உரைக்கும் மதிப்பற்ற சொற்கள் எதையுமே அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார்.
இன்னொரு நண்பர் இவருக்கு நேர்மாறான குணமுடையவர். அவசர வேலை என்று சொல்லி நான்கு
நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு செல்வார். ஆனால் இரண்டே நாள்களில் வேலையை
முடித்துக்கொண்டு அலுவலகத்துக்குத் திரும்பிவிடுவார். அதற்கென்று ஒரு கடிதம்
எழுதி, எடுக்காத விடுப்பு நாள்களை மீண்டும் கணக்கில் இணைத்துக்கொள்ளக் கோரும்
கடிதத்தையும் அவருக்கு நான்தான் எழுதவேண்டும். காரணம் இல்லாமல் ஊரில் எதற்காக
அலையவேண்டும்? அலுவலகத்துக்கு வந்தால் வேலையாவது பார்க்கலாமே என்று சொல்வார்.
இருவருமே இரண்டு துருவங்கள். ஒருவருக்கு பயணம் என்றால் கொள்ளை ஆசை. இன்னொருவருக்கு
பயணம் என்பதே வீண்வேலை. பயணங்களை முன்வைத்து உலகோர் அனைவரும் இப்படி
இருபிரிவாகத்தான் பிரிந்திருக்கிறார்கள். பயணம் என்பது ஒரு மகத்தான அனுபவம். அது
ஒரு கனவு. தேடல். அறிதல்முறை.