Home

Showing posts with label அக்கமகாதேவி. Show all posts
Showing posts with label அக்கமகாதேவி. Show all posts

Wednesday, 26 May 2021

மாபெரும் சமூகக் கனவுகள் (வெட்டவெளி வார்த்தைகள் – கன்னட வசனங்கள் அறிமுகம்)

 

கன்னடக் கவிதை இயக்கத்திலும் சமூகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் உருவான சரணர்கள் இயக்கம். கீழ்த்தட்டைச் சார்ந்த அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைத்தது இந்த இயக்கம். தமக்குள் எவ்விதமான பேதமில்லை என்பதன் குறியீடாகவும் தாம் சாதியப் பார்வைகளைக் கடந்தவர்கள் என்பதன் அடையாளமாகவும் அவர்கள் லிங்கத்தை அணிந்தனர். லிங்கத்தை அணிந்தவர்கள் அனைவரும் சரணர்கள். சாதிய அடையாளம் என்பது முற்றிலும் துடைத்தெறியப்பட்டது. அனைவரும் சிவனையே தன் முழுமுதல் இறைவனாக எண்ணிச் சரணடைந்தவர்கள். பக்தியுடன் உழைப்பு இணைக்கப்பட்டு ஒன்றிணைந்த தளம் உருவானது. உழைப்பில் சிவனுடைய வடிவத்தைக் கண்டவர்களுக்கு உழைப்பின் களமான வயலே ஆலயமானது. அந்த வயலில் சிவனை அவர்கள் குடியேற்றிக் கொண்டாடினார்கள். 

அக்கமகாதேவியின் வசனங்கள் - புத்தக அறிமுகக்கட்டுரை

 

கன்னட வசன இலக்கியத்தில் முக்கியமான ஒரு பெயர் அக்கமகாதேவி. அல்லமப் பிரபு, அக்கமகாதேவி, பசவண்ணர், மடிவாளர் என ஒரு பெரிய நீண்ட வரிசையே உண்டு. இவர்கள் அனைவரும் வசனகாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வனுபவங்களையும் ஆன்மிக அனுபவங்களையும் முன்வைத்து அவர்கள் மொழிந்தவற்றுக்கு வசனங்கள் என்று பெயர். பாட்டுத்தன்மை மிகுந்த வசீகரமான பேச்சுமொழியால் அமைந்தவை இவ்வசனங்கள். சிற்றெறும்பும் சிவமாகும் என்னும் வரி ஓர் எடுத்துக்காட்டு. இடைவிடாமல் சிவன் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் சிற்றெறும்புகூட ஒருநாள் சிவனாக மாறமுடியும். நம்பிக்கையும் பற்றும் ஈடுபாடும் நெகிழ்ச்சியும் தன்னையே அர்ப்பணிக்கிற குணமும் எல்லாவற்றையும் துறந்து சரணடைகிற மனமும் வாய்க்கப்பெற்றவர்களுக்கு சிவனருள் சாத்தியம். சிவன் வெறும் இறையுருவம் மட்டுமல்ல. அவன் நல்ல தோழன். நல்ல வழிகாட்டி. நல்ல ஆசான். நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிற சக்தி.

Wednesday, 23 November 2016

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் - வசனம்


எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார். கடைவேலைகள் எல்லாவற்றையும் அவரே செய்வார். பிறகு விறகு வெட்டுவார்.  அருகில் ஓடும் துங்கபத்திரை கால்வாயிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டுவருவார். துணிதுவைக்கும் வேலையில் மனைவிக்கு உதவியாக இருப்பார். அடிக்கடி அவர் சொல்லும் ‘காயகவே கைலாச’ என்னும் தொடருக்கு, ஒருநாள் அவரிடமே பொருள்சொல்லும்படி கேட்டேன். உழைப்புதான் கைலாசம் என்று சொன்னார் அவர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று தமிழிலும் ஒரு தொடர் உண்டு என்றேன். அவர் புன்னகைத்துக்கொண்டார்.