நடந்தாய் வாழி காவேரி புத்தகத்தைப்பற்றி ஒருநாள் என் கன்னட நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். நதியை ஒட்டிய பயணம் என்பதைக் கேட்டு அவர்கள் மலைத்துவிட்டார்கள். அதுவும் முன்னொரு காலத்தில் நிகழ்ந்த பயணம் என்பதைக் கேட்டு அவர்களுடைய வியப்பு பல மடங்காகப் பெருகியது. அப்படி ஒரு பயணம் நாமும் செல்லவேண்டும் என்று கனவு மிதக்கும் கண்களோடு ஒவ்வொருவரும் மாறிமாறிச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அப்படி ஒரு தருணம் வாய்க்கவே இல்லை. அதனால் ஒரு மாற்றுத் திட்டமாக ஒருநாள் பயணமாக சிவசமுத்திரம், தலக்காடு, திருமுக்கூடல், சோமநாதபுர ஆகிய இடங்களுக்கு மட்டும் சென்றோம். அருவிச்சாரல், சோழர் காலத்துக் கோவில், ஒரு காலத்தில் ஊரையே மூடியிருந்த மணல்மேடு, குறுகியும் விரிந்தும் பரவியோடும் காவிரி என எண்ணற்ற காட்சிகளைக் கண்டு மகிழ்ந்துவிட்டுத் திரும்பினோம். என்னிடம் அப்போதுதான் புதுசாக வாங்கிய ஒரு டிஜிட்டல் கேமிரா இருந்தது. அதைப் பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான படங்களை எடுத்தேன்.