வீட்டுக்குள் நுழைந்து அலுவலகப்பையை ஆணியில் மாட்டும்போதே
“ரெண்டு தரம் அட்ட வந்துவந்து ஒன்ன தேடிட்டு போனாண்டா” என்றாள் அம்மா. திரும்பி அம்மாவை முறைத்தேன். சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.
“எங்களுக்குள்ள கூப்ட்டுக்கறதுக்குத்தான் பட்டப்பேரு, ஒனக்கு கெடயாதுன்னு எத்தன தரம் சொன்னாலும் எப்படித்தான் மறந்துபோவுமோ தெரியலை” என்றேன். அம்மா சிரித்தபடியே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டு “சரிடா,
ரொம்பத்தான் முறுக்கிக்காத. ஒன் அரும கூட்டுக்காரன் கோபால் வந்துட்டு போனான். போதுமா?” என்றாள். பிறகு, ‘ஒன்ன செல்லுல கூப்ட்டானாம்.
நீ ஏன் எடுக்கலை?” என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குச் சென்றாள். சந்தேகத்தோடு கைப்பேசியை எடுத்துச் சோதித்தேன். சுத்தமாக சார்ஜ் இல்லை. அவசரமாக சார்ஜரில் பொருத்திவிட்டு “என்னவாம்?” என்றபடி அவள் பின்னாலேயே நடந்துசென்று நின்றேன். ”அவன் எங்கடா நின்னு பேசனான்? இன்னும் நீ வரலைன்னு சொன்னதுமே அப்படியே வாசலோட போயிட்டான்” என்றாள்.