நாடோடிகளாகத்
திரிந்தவர்கள் கூடி வாழத் தொடங்கியபோதே சமூகம் உருவாகிவிட்டது. சில சமூகங்கள்
உருவான இடத்திலேயே நிலைத்து நீடித்து வேர்விட்டு தழைத்துப் பெருகும் வாய்ப்பைப்
பெற்றன. வேறு சில சமூகங்களோ நிலைத்துநிற்க வழியின்றி இடம்பெயர்ந்துகொண்டே இருந்தன.
போர்களால் எழுந்த அச்சம் ஒரு காரணம். எதிரிகளால் எழுந்த அச்சம் ஒரு காரணம். வாழ்வதற்குத்
தேவையான வழிகளைத் தேடி அலையும் நெருக்கடியும் ஒரு காரணம். பஞ்சம் ஒரு காரணம். ஒவ்வாத
இயற்கைச்சூழல்கள் ஒரு காரணம். அரசுகள் உருவாகி, மக்கள் தேவைக்காகவும்
பாதுகாப்புக்காகவும் அணைகள், மதகுகள், சாலைகள் என புதுப்புது கட்டமைப்புகளை எழுப்ப முனையும்போதும்
இடப்பெயர்வுகள் தவிர்க்கமுடியாதவையாக மாறின. இடப்பெயர்வுக்கு இப்படி
பல காரணங்களை அடுக்கிச் சொல்லலாம். வரலாற்றுப்பாதையில் இடப்பெயர்வு என்பது ஒரு
சின்னஞ்சிறிய நிகழ்ச்சி. ஆனால், மானுட வாழ்க்கையிலோ, அது துயர்நிறைந்த வேதனை.
மதுரையில்
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு வெள்ளம் வந்தது. அப்போது நகரம் மோசமாகப்
பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்தபிறகு, அரசு ஒரு நடவடிக்கை
எடுத்தது. அதன்படி ஆற்றின் கரையை உயர்த்துவதும், தூர்ந்தும்
ஆக்கிரமிப்புக்கு ஆளாகியும் மறைந்துபோயிருந்த ஆற்றின் வடிகால்பகுதிகளைச்
சீர்ப்படுத்துவதுமாக அந்த நடவடிக்கைகள் அமைந்தன. அதையொட்டி கரையை ஒட்டியிருந்த
அப்பாஸ்பாய் தோப்பின் சில பகுதிகள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலப்பரப்பில் நீண்ட
காலமாக சேர்ந்திருந்த சமூகம், வாழிடம் தேடி நாலாபக்கமும் கலைந்து சிதறும்படி நேர்ந்தது. ஒரு
காலத்தில் அப்பாஸ்பாய் தம்மிடம் வேலை பார்க்கவந்த தொழிலாளர் குடும்பங்கள்
வசிப்பதற்காகவே உருவாக்கிய இடம் அது. அதனாலேயே அது அப்பாஸ்பாய் தோப்பு என்று பெயர்
பெற்றிருந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இந்து தொழிலாளர்களும்
அங்கே சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். நாலைந்து தலைமுறை கடப்பதற்குள், அந்த வரலாறே
இல்லாமல் போய்விட்டது. வரலாறே வரலாற்றை அழித்துவிடும் ஆச்சரியம் நிகழ்கிறது. ஆனால், கலை ஒரு வரலாற்றை
ஒருபோதும் அழிக்கவிடுவதில்லை. அதை இலக்கியமாக்கி காலத்தில்
உயிர்த்திருக்கவைக்கிறது. கண்ணகியின் சீற்றத்தையும் மதுரையின் அழிவையும்
உள்ளடக்கிய வரலாற்றை கலையாக்கிய இளங்கோவின் பரம்பரையில் வந்த எழுத்தாளர்கள் அத்தகு
வரலாற்றை மீண்டும்மீண்டும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இதோ, கையகப்படுத்தப்பட்ட
அப்பாஸ்பாய் தோப்பின் வரலாறு எஸ்.அர்ஷியாவின் எழுத்துமுயற்சியால் கலையாக
மலர்ந்திருக்கிறது.