Home

Showing posts with label Novel. Show all posts
Showing posts with label Novel. Show all posts

Friday, 30 January 2015

’வாழ்க்கை: ஒரு விசாரணை’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எழுபதுகளின் இறுதியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் கிராமத்து நூலகத்திலிருந்து செகாவுடைய சிறுகதைத்தொகுப்பொன்றைப் படிப்பதற்காக எடுத்துவந்தேன். அத்தொகுப்பில் பச்சோந்தி என்னும் சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அக்கதையில் ஒரு பொது இடத்தில் ஒருவனை ஒரு நாய் கடித்துவிடுகிறது. தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் ஒரு காவலர் அந்தச் சம்பவத்தை விசாரிக்கிறார். வெறிபிடித்த நாயை தெருவில் நடமாடவைத்ததற்காக அதன் உரிமையாளனை விசாரிக்கவேண்டுமென்றும் தண்டிக்கவேண்டுமென்றும் குரலையுயர்த்திச் சொல்கிறார். மாற்றிமாற்றி பலரும் அந்த இடத்தில் உரையாடியபடியே இருக்கிறார்கள். இடையில், அந்த நாய் அந்தத் தெருவில் வசிக்கக்கூடிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியின் வளர்ப்புநாய் என்கிற தகவலை ஒருவன் காவலரிடம் ரகசியமாகச் சொல்கிறான். உடனே காவலரின் தொனி மாறிவிடுகிறது. விறைப்பேறிய குரலில் கடிபட்டவன் ஏதேனும் சேட்டை செய்து நாயை வம்புக்கிழுத்திருக்கக்கூடும் என்றும் அதனால் நாய் கடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார். என்ன வம்பு செய்தாய் என கடிபட்டவனிடமே விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒரே கணத்தில் மனம் மாறிவிடுகிற காவலரின் நடத்தை திகைக்கவைத்துவிட்டது. வழக்கம்போல தேநீர்க்கடையில் உட்கார்ந்து தேநீர் அருந்தியபடி என் நண்பன் பழனியோடு இக்கதையைப் பகிர்ந்துகொண்டேன். அதே கடைத்தெருவின் வழியாக, பல தருணங்களில் விசாரணைக்காக கைவிலங்கிடப்பட்ட மனிதர்களை காவலர்கள் அழைத்துச் சென்ற  சம்பவங்களையும் கதையுடன் இணைத்துப் பேசிக்கொண்டோம். அவ்வழக்குகளில் எத்தனை உண்மையானவையாக இருக்குமோ, எத்தனை புனையப்பட்டவையாக இருக்குமோ என்று சொல்லி கசப்போடு சிரித்துக்கொண்டோம்.

வாழ்க்கை: ஒரு விசாரணை

வாழ்க்கை: ஒரு விசாரணைஎன்னுடைய முதல் நாவல். 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1987 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகமுக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியானவேர்கள் தொலைவில் இருக்கின்றனபுத்தகம் வெளிவந்து எனக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அந்த ஆண்டில்தான் எங்களுக்கு மகன் பிறந்தான். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை வாங்கிப் படித்ததோடு மட்டுமின்றி, அதை வெளியிடுவதற்கான முயற்சியையும் முன்னெடுத்தவர் எழுத்தாளரும் என் நண்பருமான எஸ்.சங்கரநாராயணன். அவர் எப்போதும் என் நன்றிக்குரியவர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலின் மறுபதிப்பைச் சாத்தியமாக்கியவர் என்.சி.பி.எச். பொறுப்பில் உள்ள நண்பர் சரவணன். எல்லோரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.160

’சிதறல்கள்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் நான் புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் ஆப்பரேட்டராக வேலை செய்துகொண்டிருந்தேன். தொலைபேசி நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது எங்கள் வீடு. பெரும்பாலும் நான் மாலைநேரப்பணி அல்லது இரவுநேரப்பணியையே தேர்ந்தெடுத்துச் செய்துவந்தேன். அதிகாலையில் ஆறரைமணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே உள்ள தேநீர்க்கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு, வீட்டுக்கு நடந்து செல்வதுதான் என் வழக்கம். அதிகாலைக்காற்று வீசியபடி இருக்க, ஊரையே மூடியிருக்கும் இருளின் போர்வையை விலக்கும் சூரியனின் கைவிரல்கள் பட்டதுமே மண்மீதிருந்த ஒவ்வொன்றின்மீதும் ஒளி சுடர்விடத் தொடங்கும். நடமாட்டம் குறைந்த தெருக்களின் வாசல்தோறும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் விதவிதமான வண்ணக்கோலங்களைப் பார்த்தபடியே நடப்பேன். அழகான கோலங்கள். அழகான செடிகள். அழகான மரங்கள். அழகான சாலைகள். காலைநேரம் அந்த அழகைப் பலமடங்காகப் பெருக்கி கண்களுக்கு விருந்தாக்கிவிடும்.
அந்த விருந்து அதிகநேரம் நிலைத்திருக்காது. ஒதியஞ்சாலையைக் கடந்து, கம்பன் கலையரங்கத்தை நெருங்கும்போது  மக்கள் நடமாட்டம் பெருகத் தொடங்கிவிடும். ஒரு காரணம் அருகில் இயங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம். இன்னொரு காரணம் ஆலைகளில் அது ஷிப்ட் மாறும் நேரம். எங்கெங்கும் மிதிவண்டிகள் காணப்படும். ஆலையின் சுற்றுச்சுவர்களை ஒட்டியிருந்த சின்னச்சின்ன பெட்டிக்கடைகளில் விதவிதமான வியாபாரம் நடக்கும். திருவிழாவுக்கு வந்த ஒரு பெரிய கூட்டத்தைப்போல எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதர்கள் தெரிவார்கள். பாட்டுச்சத்தம். பேச்சுச்சத்தம். சிரிப்புச்சத்தம். வசைகளின் சத்தம். வாகனங்களின் சத்தம்.  நெல்லித்தோப்பு திரும்பும்வரைக்கும் அந்தக் கோலத்தில் மாற்றமே இருக்காது. ஒவ்வொரு நாளும் அந்தச் சாலையைக் கடப்பது திருவிழாவுக்குள் புகுந்து வெளியே வருவதுபோல இருக்கும். நெல்லித்தோப்பைக் கடந்ததுமே, சாலைகளின் மெளன அழகு மறுபடியும் பார்வையில் விழத் தொடங்கும்.

சிதறல்கள்

சிதறல்கள் நாவல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நெசவாலைத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் கதையமைப்பைக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை கையைவிட்டுப் போகும்போது, அவ்வேலையுடன் வெகுகாலம் வாழ்ந்து பழகிவிட்ட எல்லா வகையான தொழிலாளர்களின் வேதனையையும் அடிச்சரடாக இந்த நாவல் கொண்டிருந்தது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மறுபதிப்பு சாத்தியமானது. நாவலை வெளியிட்ட என்.சி.பி.எச். நிறுவனத்துக்கு நன்றி.


புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.140

’பாய்மரக்கப்பல்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் எனக்கு வேலை கிடைத்ததும், அவ்வேலைக்கான பயிற்சிக்காக நான் எங்கள் ஊரைவிட்டு வெளியேறினேன். முப்பதாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை, ஆண்டுக்கு சில முறைகள் என்கிற கணக்கில் அவ்வப்போது ஊருக்குச் சென்றுவந்தபடியே இருக்கிறேன். ஊரை மறந்து ஒருநாளும் இருந்ததில்லை. என் சிறுவயதில் நான் பார்த்த ஊர் இப்போது இல்லை. இப்போது இருப்பது அதன் இன்னொரு வடிவம். எல்லாமே மாறிவிட்டது. பழைய ஊர் என் மனத்தில்மட்டுமே உள்ளது. படிப்பதற்குத் தகுந்த மனநிலயைக் கொடுத்த தோப்புகள் எதுவுமே இன்று இல்லை.  திறக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்து மூடும் சமயத்தில் வெளியே வரும்வரை பசிகொண்ட என் மனத்துக்கு விருந்தளித்த நூலகம் திறந்திருந்தாலும் வருவதற்கு ஆளற்று இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாங்கிகளில் நிறைந்து வழிந்த புத்தகங்களைக் கொண்ட நூலக அறையில் தூசு படிந்து அழுக்கும் கூளமும் நிறைந்திருக்கின்றன.

ஏரிக்கரை முழுக்க முட்செடிகள் முளைத்திருக்கின்றன. அதன்மீது நீண்டிருந்த ஒற்றையடிப்பாதையின் தடமே இல்லை. இதமான காற்று உடலைத் தழுவ, கரையை ஒட்டி விளைந்து நிற்கிற பசுமையான வயல்வெளிகளைப் பார்த்தபடி அந்தப் பாதையில்தான் காலையிலும் மாலையிலும் நானும் என் நண்பன் பழனியும் பேசிக்கொண்டே நடப்போம். அப்போதெல்லாம் ஏரிக்கரைதான் எங்கள் புழங்குதளம். ஒருபக்கம் கல்கி, சாண்டில்யன் நாவல்கள். இன்னொரு பக்கம் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி நாவல்கள். மாறிமாறிப் படிப்பதும் உலவும் நேரங்களிலெல்லாம் அவற்றைப்பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதுமாக இருப்போம். வாசிப்பும் பேச்சும் எங்களை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த உலகத்திலிருந்து மீள்வதற்கு மனமே இருக்காது. ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கும் நடையை ஒருபோதும் பத்துமணிக்கு முன்னால் நிறுத்தியதில்லை. எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது.

பாய்மரக்கப்பல்

பாய்மரக்கப்பல்நாவல் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நாவலாக இலக்கியச்சிந்தனை அமைப்பால் பாய்மரக்கப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கியது. வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்திய சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி காவ்யா பதிப்பகம் மறுபதிப்பாக கொண்டுவந்தது.


நாவல் கிடைக்குமிடம்:

காவ்யா பதிப்பகம்,
16, இரண்டாவது குறுக்குத்தெரு
டிரஸ்டுபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை-24.
விலை.ரூ.180

Wednesday, 7 January 2015

அர்ஷியாவின் புதிய நாவல் ‘அப்பாஸ்பாய் தோப்பு’



நாடோடிகளாகத் திரிந்தவர்கள் கூடி வாழத் தொடங்கியபோதே சமூகம் உருவாகிவிட்டது. சில சமூகங்கள் உருவான இடத்திலேயே நிலைத்து நீடித்து வேர்விட்டு தழைத்துப் பெருகும் வாய்ப்பைப் பெற்றன. வேறு சில சமூகங்களோ நிலைத்துநிற்க வழியின்றி இடம்பெயர்ந்துகொண்டே இருந்தன. போர்களால் எழுந்த அச்சம் ஒரு காரணம். எதிரிகளால் எழுந்த அச்சம் ஒரு காரணம். வாழ்வதற்குத் தேவையான வழிகளைத் தேடி அலையும் நெருக்கடியும் ஒரு காரணம். பஞ்சம் ஒரு காரணம். ஒவ்வாத இயற்கைச்சூழல்கள் ஒரு காரணம். அரசுகள் உருவாகி, மக்கள் தேவைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அணைகள், மதகுகள், சாலைகள் என புதுப்புது கட்டமைப்புகளை எழுப்ப முனையும்போதும் இடப்பெயர்வுகள் தவிர்க்கமுடியாதவையாக மாறின.  இடப்பெயர்வுக்கு இப்படி பல காரணங்களை அடுக்கிச் சொல்லலாம். வரலாற்றுப்பாதையில் இடப்பெயர்வு என்பது ஒரு சின்னஞ்சிறிய நிகழ்ச்சி. ஆனால், மானுட வாழ்க்கையிலோ, அது துயர்நிறைந்த வேதனை.
மதுரையில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு வெள்ளம் வந்தது. அப்போது நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்தபிறகு, அரசு ஒரு நடவடிக்கை எடுத்தது. அதன்படி ஆற்றின் கரையை உயர்த்துவதும், தூர்ந்தும் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியும் மறைந்துபோயிருந்த ஆற்றின் வடிகால்பகுதிகளைச் சீர்ப்படுத்துவதுமாக அந்த நடவடிக்கைகள் அமைந்தன. அதையொட்டி கரையை ஒட்டியிருந்த அப்பாஸ்பாய் தோப்பின் சில பகுதிகள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலப்பரப்பில் நீண்ட காலமாக சேர்ந்திருந்த சமூகம், வாழிடம் தேடி நாலாபக்கமும் கலைந்து சிதறும்படி நேர்ந்தது. ஒரு காலத்தில் அப்பாஸ்பாய் தம்மிடம் வேலை பார்க்கவந்த தொழிலாளர் குடும்பங்கள் வசிப்பதற்காகவே உருவாக்கிய இடம் அது. அதனாலேயே அது அப்பாஸ்பாய் தோப்பு என்று பெயர் பெற்றிருந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இந்து தொழிலாளர்களும் அங்கே சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். நாலைந்து தலைமுறை கடப்பதற்குள், அந்த வரலாறே இல்லாமல் போய்விட்டது. வரலாறே வரலாற்றை அழித்துவிடும் ஆச்சரியம் நிகழ்கிறது. ஆனால், கலை ஒரு வரலாற்றை ஒருபோதும் அழிக்கவிடுவதில்லை. அதை இலக்கியமாக்கி காலத்தில் உயிர்த்திருக்கவைக்கிறது. கண்ணகியின் சீற்றத்தையும் மதுரையின் அழிவையும் உள்ளடக்கிய வரலாற்றை கலையாக்கிய இளங்கோவின் பரம்பரையில் வந்த எழுத்தாளர்கள் அத்தகு வரலாற்றை மீண்டும்மீண்டும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இதோ, கையகப்படுத்தப்பட்ட அப்பாஸ்பாய் தோப்பின் வரலாறு எஸ்.அர்ஷியாவின் எழுத்துமுயற்சியால்  கலையாக மலர்ந்திருக்கிறது.