Home

Showing posts with label காவ்யா. Show all posts
Showing posts with label காவ்யா. Show all posts

Sunday, 10 August 2025

திருக்குறள் மன்றம் நல்லபெருமாள் : ஒரு தனிமனித இயக்கம்

 

நான் பெங்களூருக்கு 1989ஆம் ஆண்டில் குடியேறினேன். அப்போது பெங்களூரில் எனக்கு அறிமுகமான ஒரே நண்பர் காவ்யா சண்முகசுந்தரம். அவர்தான் எனக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்தார். அவருடைய வீட்டுக்கும் எங்களுடைய வீட்டுக்கும் ஐந்து நிமிட நடை தொலைவு மட்டுமே.  அவர் வழியாகத்தான் பலர் எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் நல்லபெருமாள். அந்த நாள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நினைவிலுள்ளது.

Sunday, 21 January 2024

நாற்பது ரூபாய்

  

ஏரிக்கரையை ஒட்டி நடந்துகொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் நாற்பது ஐம்பது கொக்குகள் கூட்டமாக பறந்துவருவதைப் பார்த்ததும் நின்றுவிட்டேன். சீரான இடைவெளியுடன் அவை வானத்தில் மிதந்து வந்த காட்சியைக் கண்டதும் மனம் மயங்கியது. எதைநோக்கிச் செல்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் அந்த இடத்திலேயே அசையாமல் நின்றேன்.

Saturday, 23 July 2022

இறையடியான் : எல்லோரும் விரும்பும் இனிய ஆளுமை

  

பெங்களூருக்குக் குடிவந்த புதிதில் ஒவ்வொரு நாளும் மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய பிறகு, நானும் காவ்யா சண்முகசுந்தரமும் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்போம். விடுமுறை தினங்களில் அந்த உரையாடல் நேரம் மணிக்கணக்கில் நீண்டுபோகும். ஒருமுறை விடுமுறையில் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தபோது, கூடத்தில் அவருடன் இன்னொருவர் உரையாடிக்கொண்டிருந்தார். மெலிந்த உருவம். நல்ல உயரம். கண்களில் கனிவு குடிகொண்டிருந்தது. என் அப்பா வயதிருக்கும் என்று தோன்றியது.

Sunday, 13 March 2022

வாழ்க்கையில் ஒரு நாள் - சிறுகதை


சென்னையிலிருந்து திரும்பியதுமுதல் யாரிடமும் பேசாமல்  அறைக்குள்ளேயே அடைபட்டிருந்தான் சண்முகவேலன். அம்மா, அப்பா, இந்திராணி, குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றைச்சொல் பதில்களைமட்டுமே சொன்னான். பூபாளம் இசைக்குழுவிலிருந்து வந்த அலைபேசி அழைப்புகளைக்கூட அவன் மனம் பொருட்படுத்தவில்லை. அடுப்பில் வைத்த விறகுபோல அவன் மனம் எரிந்து கரியாகிக்கொண்டிருந்தது. இனி தன் கனவுகள் பொசுங்கிச் சாம்பலாவதை யாராலும் தடுக்கமுடியாது என்று தோன்றியபடியே இருந்தது.

Monday, 3 February 2020

தரிசனமும் ரகசியமும் - கட்டுரை



எண்பதுகளில் என் பணியின் நிமித்தமாக கர்நாடகத்தில் பெல்லாரி, ஹோஸ்பெட், கொப்பள், கதக், ஹூப்ளி, சித்ரதுர்கா, ஷிமோகா என பல இடங்களுக்கு மாறிமாறி அலைந்துகொண்டிருந்தேன்.  அப்போது தமிழில் வெளிவந்த எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் சந்தா கட்டி வரவழைத்துப் படித்தேன்.  ஏதாவது ஒரு பத்திரிகையில் இன்னொரு பத்திரிகையின் முகவரியும் விவரங்களும் இருக்கும். அவற்றை வைத்து அவர்களோடு தொடர்புகொண்டு பத்திரிகைகளை வரவழைத்துக்கொள்வேன். அவ்வகையில்தான் பெங்களூரிலிருந்து வெளிவந்த படிகள் இதழோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற எழுபதுகளில் கலைஇலக்கியம் என்னும் கருத்தரங்கம் பற்றிய செய்திகள் அதில் இடம்பெற்றிருந்தன. எழுபதுகளின் இலக்கியச்செய்திகளைத் தோராயமாக அறிந்துகொள்ள அக்கருத்தரங்கத்தில் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான பயணத்திட்டங்களையும் வகுத்துவைத்திருந்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக பணியில் விடுப்பெடுக்க முடியாதபடி ஒரு சிக்கல் வந்துவிட்டது. அதனால் கருத்தரங்கத்துக்குச் செல்லவில்லை. அந்த ஏமாற்றம் எனக்கு அளவற்ற வருத்தத்தைக் கொடுத்தது.

Friday, 30 January 2015

’பாய்மரக்கப்பல்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் எனக்கு வேலை கிடைத்ததும், அவ்வேலைக்கான பயிற்சிக்காக நான் எங்கள் ஊரைவிட்டு வெளியேறினேன். முப்பதாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை, ஆண்டுக்கு சில முறைகள் என்கிற கணக்கில் அவ்வப்போது ஊருக்குச் சென்றுவந்தபடியே இருக்கிறேன். ஊரை மறந்து ஒருநாளும் இருந்ததில்லை. என் சிறுவயதில் நான் பார்த்த ஊர் இப்போது இல்லை. இப்போது இருப்பது அதன் இன்னொரு வடிவம். எல்லாமே மாறிவிட்டது. பழைய ஊர் என் மனத்தில்மட்டுமே உள்ளது. படிப்பதற்குத் தகுந்த மனநிலயைக் கொடுத்த தோப்புகள் எதுவுமே இன்று இல்லை.  திறக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்து மூடும் சமயத்தில் வெளியே வரும்வரை பசிகொண்ட என் மனத்துக்கு விருந்தளித்த நூலகம் திறந்திருந்தாலும் வருவதற்கு ஆளற்று இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாங்கிகளில் நிறைந்து வழிந்த புத்தகங்களைக் கொண்ட நூலக அறையில் தூசு படிந்து அழுக்கும் கூளமும் நிறைந்திருக்கின்றன.

ஏரிக்கரை முழுக்க முட்செடிகள் முளைத்திருக்கின்றன. அதன்மீது நீண்டிருந்த ஒற்றையடிப்பாதையின் தடமே இல்லை. இதமான காற்று உடலைத் தழுவ, கரையை ஒட்டி விளைந்து நிற்கிற பசுமையான வயல்வெளிகளைப் பார்த்தபடி அந்தப் பாதையில்தான் காலையிலும் மாலையிலும் நானும் என் நண்பன் பழனியும் பேசிக்கொண்டே நடப்போம். அப்போதெல்லாம் ஏரிக்கரைதான் எங்கள் புழங்குதளம். ஒருபக்கம் கல்கி, சாண்டில்யன் நாவல்கள். இன்னொரு பக்கம் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி நாவல்கள். மாறிமாறிப் படிப்பதும் உலவும் நேரங்களிலெல்லாம் அவற்றைப்பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதுமாக இருப்போம். வாசிப்பும் பேச்சும் எங்களை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த உலகத்திலிருந்து மீள்வதற்கு மனமே இருக்காது. ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கும் நடையை ஒருபோதும் பத்துமணிக்கு முன்னால் நிறுத்தியதில்லை. எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது.

பாய்மரக்கப்பல்

பாய்மரக்கப்பல்நாவல் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நாவலாக இலக்கியச்சிந்தனை அமைப்பால் பாய்மரக்கப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கியது. வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்திய சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி காவ்யா பதிப்பகம் மறுபதிப்பாக கொண்டுவந்தது.


நாவல் கிடைக்குமிடம்:

காவ்யா பதிப்பகம்,
16, இரண்டாவது குறுக்குத்தெரு
டிரஸ்டுபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை-24.
விலை.ரூ.180