எண்பதுகளில் என் பணியின் நிமித்தமாக கர்நாடகத்தில் பெல்லாரி, ஹோஸ்பெட், கொப்பள், கதக், ஹூப்ளி, சித்ரதுர்கா, ஷிமோகா என பல இடங்களுக்கு மாறிமாறி அலைந்துகொண்டிருந்தேன். அப்போது தமிழில் வெளிவந்த எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் சந்தா கட்டி வரவழைத்துப் படித்தேன். ஏதாவது ஒரு பத்திரிகையில் இன்னொரு பத்திரிகையின் முகவரியும் விவரங்களும் இருக்கும். அவற்றை வைத்து அவர்களோடு தொடர்புகொண்டு பத்திரிகைகளை வரவழைத்துக்கொள்வேன். அவ்வகையில்தான் பெங்களூரிலிருந்து வெளிவந்த படிகள் இதழோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற எழுபதுகளில் கலைஇலக்கியம் என்னும் கருத்தரங்கம் பற்றிய செய்திகள் அதில் இடம்பெற்றிருந்தன. எழுபதுகளின் இலக்கியச்செய்திகளைத் தோராயமாக அறிந்துகொள்ள அக்கருத்தரங்கத்தில் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான பயணத்திட்டங்களையும் வகுத்துவைத்திருந்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக பணியில் விடுப்பெடுக்க முடியாதபடி ஒரு சிக்கல் வந்துவிட்டது. அதனால் கருத்தரங்கத்துக்குச் செல்லவில்லை. அந்த ஏமாற்றம் எனக்கு அளவற்ற வருத்தத்தைக் கொடுத்தது.