பெங்களூருக்குக் குடிவந்த புதிதில் ஒவ்வொரு நாளும் மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய பிறகு, நானும் காவ்யா சண்முகசுந்தரமும் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்போம். விடுமுறை தினங்களில் அந்த உரையாடல் நேரம் மணிக்கணக்கில் நீண்டுபோகும். ஒருமுறை விடுமுறையில் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தபோது, கூடத்தில் அவருடன் இன்னொருவர் உரையாடிக்கொண்டிருந்தார். மெலிந்த உருவம். நல்ல உயரம். கண்களில் கனிவு குடிகொண்டிருந்தது. என் அப்பா வயதிருக்கும் என்று தோன்றியது.