Home

Showing posts with label Paaimarakkappal. Show all posts
Showing posts with label Paaimarakkappal. Show all posts

Friday, 30 January 2015

’பாய்மரக்கப்பல்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை

எண்பதுகளின் தொடக்கத்தில் எனக்கு வேலை கிடைத்ததும், அவ்வேலைக்கான பயிற்சிக்காக நான் எங்கள் ஊரைவிட்டு வெளியேறினேன். முப்பதாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. அன்றுமுதல் இன்றுவரை, ஆண்டுக்கு சில முறைகள் என்கிற கணக்கில் அவ்வப்போது ஊருக்குச் சென்றுவந்தபடியே இருக்கிறேன். ஊரை மறந்து ஒருநாளும் இருந்ததில்லை. என் சிறுவயதில் நான் பார்த்த ஊர் இப்போது இல்லை. இப்போது இருப்பது அதன் இன்னொரு வடிவம். எல்லாமே மாறிவிட்டது. பழைய ஊர் என் மனத்தில்மட்டுமே உள்ளது. படிப்பதற்குத் தகுந்த மனநிலயைக் கொடுத்த தோப்புகள் எதுவுமே இன்று இல்லை.  திறக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்து மூடும் சமயத்தில் வெளியே வரும்வரை பசிகொண்ட என் மனத்துக்கு விருந்தளித்த நூலகம் திறந்திருந்தாலும் வருவதற்கு ஆளற்று இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தாங்கிகளில் நிறைந்து வழிந்த புத்தகங்களைக் கொண்ட நூலக அறையில் தூசு படிந்து அழுக்கும் கூளமும் நிறைந்திருக்கின்றன.

ஏரிக்கரை முழுக்க முட்செடிகள் முளைத்திருக்கின்றன. அதன்மீது நீண்டிருந்த ஒற்றையடிப்பாதையின் தடமே இல்லை. இதமான காற்று உடலைத் தழுவ, கரையை ஒட்டி விளைந்து நிற்கிற பசுமையான வயல்வெளிகளைப் பார்த்தபடி அந்தப் பாதையில்தான் காலையிலும் மாலையிலும் நானும் என் நண்பன் பழனியும் பேசிக்கொண்டே நடப்போம். அப்போதெல்லாம் ஏரிக்கரைதான் எங்கள் புழங்குதளம். ஒருபக்கம் கல்கி, சாண்டில்யன் நாவல்கள். இன்னொரு பக்கம் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி நாவல்கள். மாறிமாறிப் படிப்பதும் உலவும் நேரங்களிலெல்லாம் அவற்றைப்பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதுமாக இருப்போம். வாசிப்பும் பேச்சும் எங்களை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த உலகத்திலிருந்து மீள்வதற்கு மனமே இருக்காது. ஒவ்வொரு நாளும் மாலையில் தொடங்கும் நடையை ஒருபோதும் பத்துமணிக்கு முன்னால் நிறுத்தியதில்லை. எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது.

பாய்மரக்கப்பல்

பாய்மரக்கப்பல்நாவல் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நாவலாக இலக்கியச்சிந்தனை அமைப்பால் பாய்மரக்கப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கியது. வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்திய சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி காவ்யா பதிப்பகம் மறுபதிப்பாக கொண்டுவந்தது.


நாவல் கிடைக்குமிடம்:

காவ்யா பதிப்பகம்,
16, இரண்டாவது குறுக்குத்தெரு
டிரஸ்டுபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை-24.
விலை.ரூ.180