சென்னையிலிருந்து திரும்பியதுமுதல் யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே அடைபட்டிருந்தான் சண்முகவேலன். அம்மா, அப்பா, இந்திராணி, குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றைச்சொல் பதில்களைமட்டுமே சொன்னான். பூபாளம் இசைக்குழுவிலிருந்து வந்த அலைபேசி அழைப்புகளைக்கூட அவன் மனம் பொருட்படுத்தவில்லை. அடுப்பில் வைத்த விறகுபோல அவன் மனம் எரிந்து கரியாகிக்கொண்டிருந்தது. இனி தன் கனவுகள் பொசுங்கிச் சாம்பலாவதை யாராலும் தடுக்கமுடியாது என்று தோன்றியபடியே இருந்தது.