ஆதர்ஷா
திரையரங்கிலிருந்து செல்லும் சாலை ஒரு செங்குத்துக்கோடுபோல பழைய சென்னைச்சாலையைத் தொட்டு
முடிகிறது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி பத்து நிமிடநேரம் நடந்துசென்றால் ஏரியை
அடைந்துவிடலாம். யாருமே அதை சாதாரணமாக ஏரி என்று சொல்வதில்லை. அல்சூர் ஏரி என்று குறிப்பிடுவதுதான்
வழக்கம். ஒரு செல்லப்பெயர்போல. ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்த ஏரி. கணந்தோறும்
புகை கக்கியபடி ஓடுகிற வாகனங்களுக்கிடையே உலரவைக்கப்பட்ட பள்ளிக்கூட வெள்ளைச் சீருடைபோல
பளபளக்கும். ஏரியையொட்டிய சாலையில் நடக்கும்போது உணரக்கூடிய காற்றின் குளுமையில் திளைப்பது
எப்போதும் இனிய அனுபவம்.