Home

Showing posts with label இதயம் தொட்ட இலக்கியவாதிகள். Show all posts
Showing posts with label இதயம் தொட்ட இலக்கியவாதிகள். Show all posts

Sunday, 26 June 2022

வாசிப்பு என்னும் வரம்

 

மதுரைக்கு அருகில் மேலூருக்கு அருகிலிருக்கும் உலநாதபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர் வேலாயுதம். வறுமை சூழ்ந்த அந்தக் காலத்து வாழ்க்கை அவரை பள்ளியிறுதிவரைக்கும் மட்டுமே படிப்பதற்கு அனுமதித்தது. படிப்பைத் தொடரமுடியாவிட்டாலும் மனம் தளராமல் வெவ்வேறு கடைகளில் சிப்பந்தியாகப் பணிபுரிந்து வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டார். பணிவாய்ப்புகள் அவரை கோவைக்குக் குடிபெயரவைத்தன. பணிகள் வழியாகக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் சொந்தமாக குறைந்த முதலீட்டில் பல்பொருள் அங்காடியொன்றைத் திறந்தார். விற்பனைப்பொருட்களுக்கு இடையில் கடையின் ஓரமாக அலமாரித்தட்டுகளில் புத்தகங்களையும் அடுக்கி விற்கத் தொடங்கினார். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகங்களை மட்டுமே கடைமுழுதும் நிரப்பி விற்பனைசெய்யும் விற்பனையாளராக மாறினார். நாளடைவில் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடும் சிறந்த பதிப்பாசிரியராக உயர்ந்தார். எழுத்தாளர்களோடும் வாசகர்களோடும் அவருக்கு வாய்த்த நட்பையும் நெருக்கத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஆண்டுதோறும் வாசகர் திருவிழாக்களை நடத்தினார். வெவ்வேறு ஆளுமைகளின் பெயரால் விருதுகளை நிறுவி ஆண்டுதோறும் திருவிழாவைப்போல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.