இந்திய மொழிகளின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களும் உலக மொழிகளின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களும் கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பாரதியார், க.நா.சு., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஆர்.ஷண்முகசுந்தரம், திருலோக சீதாராம், கரிச்சான் குஞ்சு, சுந்தர ராமசாமி போன்ற பல இலக்கியப்படைப்பாளிகள் தம் சொந்த இலக்கிய முயற்சிகளைக் கடந்து மொழிபெயர்ப்பிலும் அக்கறை கொண்டிருந்தனர். த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சரஸ்வதி.ராம்னாத், தி.சு.சதாசிவம், சு.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் மொழிபெயர்ப்புகாகவே வாழ்ந்தவர்கள். ஆர்.ஷண்முகசுந்தரம் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாளுமைகளால் தமிழுக்குக் கிடைத்த படைப்புகள் ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் தமிழிலிருந்து பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளின் எண்ணிக்கை பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. தமிழ்ப்படைப்புகள் ஏன் தமிழகத்துக்கு வெளியே பிறமொழிகளுக்குச் செல்வதில்லை என்பது முக்கியமான ஒரு கேள்வி.
இந்திய மொழிகளில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும்கூட தமிழிலக்கியம் பற்றித் தெரியவில்லை. இலக்கியம் கற்பிக்கும் அயல்மொழி ஆசிரியர்களுக்கும்கூட அதிக அளவு தெரியவில்லை. திருவள்ளுவர், பாரதியார் என்கிற ஆளுமைகளைமட்டுமே அவர்கள் பெயரளவில் தெரிந்துவைத்திருக்கிறார்கள். திருக்குறள்பற்றியோ, பாரதியாரின் படைப்புகள் பற்றியோ ஆழமாகத் தெரிந்துவைத்திருப்பவர்கள் மிகமிகக் குறைவானவர்கள். இது ஏமாற்றத்துக்குரிய உண்மை.