உட்கார்ந்து செல்வதற்கு வசதியாக ஏதாவது பேருந்து வரக்கூடும் என்கிற நம்பிக்கையோடு அலுவலக வளாகத்துக்கு அருகிலேயே இருக்கும் நிறுத்தத்தில் காத்திருந்தபோது "எரநூத்தியொன்னு போயிடுச்சா சார்?" என்று கேட்டபடி எதிரில் வந்து நின்றாள் ஒருத்தி. எலும்பும் தோலுமான வற்றல் தோற்றம். கழுத்தில் படர்ந்திருந்த மஞ்சள் கயிறு சட்டென்று தமிழ் அடையாளத்தை உணர்த்தியது. இன்னும் இல்லம்மா என்று பதில் சொல்லிவிட்டு, கைப்பேசியில் உறுமலோடு வந்து இறங்கிய அவசரச் செய்தியின்மீது பார்வையைப் பதித்தேன். நண்பரொருவர் மும்பையிலிருந்து அனுப்பிய செய்தி. படித்த கையோடு அதற்குத் தகுந்த விடைச்செய்தியைத் திரையில் அடித்து அனுப்பிவிட்டு, பாதுகாப்பு கருதி கைப்பேசியை பைக்குள் வைத்தேன்.