Home

Showing posts with label வடக்கு வாசல். Show all posts
Showing posts with label வடக்கு வாசல். Show all posts

Monday, 26 April 2021

ஏரியின் அமைதி - கட்டுரை

 

          ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது பிறகோ பொழிகிற அடைமழையில் எங்கள் ஊர் ஏரியில் நீர் நிரம்பத் தொடங்கி அடுத்த பத்து நாட்களில் நிறைந்து வழிவது வழக்கம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் கண்ட எங்கள் கிராமத்து ஏரியின் சித்திரம் நிறம் மாறாமல் என் மனத்துக்குள் தொங்கிக்கொண்டிருக்கிறது. "ஆத்தாடி, சமுத்திரமாட்டம் பொங்கிங்கெடக்குது", "புள்ளகுட்டிங்கள பத்தரமா பாத்துக்குங்கடி, கரபக்கமா போயிடபோவுதுங்க", "ஐநாரப்பனுக்கு கெடாவெட்டி பொங்கல் வைக்கணும்டி அவுரே இல்லன்னா இந்த ஏரிய காபந்து பண்றதுக்கு யாரு இருக்கா?" குடிப்பதற்கான தண்ணீரை அடிகுழாயில் அடித்து பாத்திரங்களில் நிரப்பியெடுக்கிற நேரங்களில் கூடியிருக்கிற பெண்கள் தமக்குள் மாறிமாறிப் பேசிக்கொண்டதெல்லாம் இன்னும் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளது. சின்ன வயதில் நாம் கண்ட ஒவ்வொன்றும் ஆழ்மனம் வரை சென்று அப்படியே புதைந்துவிடுகிறது. கிணற்றுக்குள் விழுந்துவிடும் மரப்பாச்சிப்பொம்மைபோல. நினைவுகளோடும் ரத்தத்தோடும் இரண்டறக் கலந்துவிடுகிறது. நிலத்தில் தூவப்பட்ட எருவைப்போல. அதனாலேயே நினைக்கும் நேரத்திலெல்லாம் அந்தச் சித்திரத்தை ஒரு பழைய புகைப்படத்தொகுப்பைப் பிரித்துப் பார்ப்பதுபோல நெஞ்சின் ஆழத்திலிருந்து பிரித்தெடுத்துப் பார்த்து மகிழ்கிறோம். தற்செயலாக, வேறொரு கிராமத்து ஏரியைப் பார்க்கநேர்கிற தருணங்களில் கூட அதன் உருவில் நம் மனம் நம் ஊர் ஏரியைத்தான் பார்க்கிறது.

Sunday, 18 April 2021

ஒருவேளை உணவு - நினைவுச்சித்திரம்

 

     உட்கார்ந்து செல்வதற்கு வசதியாக ஏதாவது பேருந்து வரக்கூடும் என்கிற நம்பிக்கையோடு அலுவலக வளாகத்துக்கு அருகிலேயே இருக்கும் நிறுத்தத்தில் காத்திருந்தபோது "எரநூத்தியொன்னு போயிடுச்சா சார்?" என்று கேட்டபடி எதிரில் வந்து நின்றாள் ஒருத்தி.  எலும்பும் தோலுமான வற்றல் தோற்றம். கழுத்தில் படர்ந்திருந்த மஞ்சள் கயிறு சட்டென்று தமிழ் அடையாளத்தை உணர்த்தியது. இன்னும் இல்லம்மா என்று பதில் சொல்லிவிட்டு, கைப்பேசியில் உறுமலோடு வந்து இறங்கிய அவசரச் செய்தியின்மீது பார்வையைப் பதித்தேன். நண்பரொருவர் மும்பையிலிருந்து அனுப்பிய செய்தி. படித்த கையோடு அதற்குத் தகுந்த விடைச்செய்தியைத் திரையில் அடித்து அனுப்பிவிட்டு, பாதுகாப்பு கருதி கைப்பேசியை பைக்குள் வைத்தேன்.

Sunday, 14 March 2021

உயரத்தை நோக்கி - சிறுகதை

 

ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்ததும் பத்மாவுக்கு சிரிப்பு வந்தது. ஒரே ஒருநாள் பழக்கத்தில் ஒரு வாரமாகத் தொடர்ந்து வரத் தொடங்கிவிட்டது. புதிய ஊரில் புதிய நட்பு. வாழ்க்கைக்கான ஒரு திசையைத்தேடி தன்னைப் போலவே இடம்பெயர்ந்து வந்ததாக இருக்குமோ என்று தோன்றியது. உள்ளே சென்று வழக்கம் போல கைநிறைய அரிசியை அள்ளிவந்து வைத்தாள். அது கொத்தியெடுக்கும் வேகத்தையே நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தாள். புத்தம் புதிய ஜன்னல் திரைச்சீலை காற்றில் அசைந்தது. பதினோரு மணியளவில் கூட காற்றின் குளுமை ஆச்சரியப்படவைத்தது. நடந்து அருகிலிருந்து மற்றொரு ஜன்னலருகே சென்றாள். பளிச்சென்றிருந்த வானமும் அருகருகே நின்றிருந்த உயர்ந்த கட்டிடங்களின் வரிசைகளும் மலைப்பைத் தந்தன.